”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல அறிபவர் பார்வைக்கு ஏற்ப அறிகின்ற பொருள் மாறுபடும். இது பற்றி வார்த்தைக்கு உயிர் கொடுப்பவன் வாசகன் எனும் ஒரு பதிவில் விரிவாகக் கூறியுள்ளேன். கீதையின் சாரம் என்னுடைய அறிவிற்கு வேறொரு கோணத்தில் புலப்படுகிறது. அதனை இங்கு பகிர்கின்றேன். அதுவே கீதையை நாம் பார்க்க வேண்டிய கோணம் என்றும், கீதையின் அர்த்தம் என்றும் நான் நினைக்கின்றேன்.
கடவுளாக நாம் வழிபடும் கிருஷ்ணர் எனப்படுவது வெறும் கற்சிலைகள் அல்ல. கண்ணன் குழந்தையாகப் பிறந்தது முதல் மகாபாரத யுத்தம் நிகழ்த்தியது வரையான கதைகளை நாம் அறிவோம். அக்கதைகளை வழிபடுகின்றோம்; அவன் போற்றிய தர்மங்களை வழிபடுகின்றோம்; அவன் நின்ற மார்க்கத்தை வழிபடுகின்றோம். அக்கதைகளில் வரும் கதா பாத்திரங்களாக நாம் பகவானைக் காண்கின்றோம். அவனது கொள்கைகளையும் தர்மங்களையும் சிந்தையேற்றுகின்றோம். நாமும் அந்த மார்க்கத்தில் நிற்க விளைவதுதான் உண்மையான வழிபாடாக இருக்கும். அக்கதைகள் இருக்கும்வரை ஸ்ரீ கிருஷ்ணரும் அருள் பாலித்துக் கொண்டே இருப்பார்.
புராணங்களில் கிருஷ்ணர் பின்வருமாறுதான் சித்தரிக்கப்படுகிறார். எல்லோர் உள்ளங்களிலும் உறையும் பரமாத்மா விஷ்ணு, கருணையே வடிவானவர், தர்மமே உருவானவர். நமது சிந்தையில் , நமது சுய விருப்பு வெறுப்பு மீறி மேன்நின்று #நமக்குள்ளிருந்தே உண்மையை உரைக்கிறார். "நீ என்னை அடையும்போது நீயே யாவும் ஆகின்றாய். நீ மேன்நிலை அடைந்து விட்டாய். நீ இனித் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு உரியவன். இதை நீ பிறர்க்கும் போதிப்பாய். அவர்களும் என்னை அடைய வழிகாட்டுவாய்" என எம்மையே செயலாற்றுமாறு பணிக்கிறார். இவைதான் பரம்பொருளின் இரகசியங்கள். உள்ளத்திலே உறையும் பரமாத்மாவை வெளியில் தேடிப் பயன் இல்லை. தர்மத்தின் மேலான சக்திகள் யாவும் சுருங்குகிறது அங்கே!
கீதா சாரத்தை மேலும் விரிவாக பார்ப்போம்,
கிருஷ்ணர் என்பதை ஒரு தனிப் பொருளாக வெளியிலேவைத்து நாம் பார்க்கக் கூடாது. அவர் நாம் மனச்சுத்தம் அடைந்து, அவரைச் சரணடையும்போது நம்முள் ஒன்றுபட்டவர் ஆகின்றார். நாம் நமது அற்ப எண்ணங்களைக் கைவிட்டு தர்ம மார்க்கத்தைக் கைக்கொள்ளும்போது, அந்த தர்மம், நமது சிந்தையிலேயே மேன்நின்று கிருஷ்ணராக நமக்கு வேண்டிய ஞானத்தினை உபதேசிக்கிறது. நீங்கள் கிருஷ்ணரைச் சரணடையும்போது அவனது தர்மங்களைத் தாங்கியவன் ஆகின்றீர்கள். இப்போது அவர் வேறு நீங்கள் வேறு அல்ல. இப்போது கண்ணன் பார்த்தீபனுக்கு உரைத்த கீதையின் சாரத்தை உங்கள் அற்பஅறிவு யாவற்றையும் கடந்து, உங்களுக்கு நீங்களே, அனைத்திற்கும் மேல் நின்று, உரைப்பதாகச் சொல்லிப் பாருங்கள். இப்போது நீங்கள் பிறப்பு, இறப்பினைக் கடந்தவர்கள். கிருஷ்ணரின் தர்மத்தில் வாழ்பவர்கள்.
- பிறந்தவர்கள் இறக்கிறார்கள். இறந்தவர்கள் பிறக்கிறார்கள். ஆனால் நான் பிறப்பு இறப்பு அற்றவன்; அனைத்து உயிரினங்களுக்கும் மேலானவன். நியாயங்கள் மீறப்பட்டு அநியாயம் தலைதூக்கும்போது நான் அவதரிக்கிறேன். எவர் என்னை எவ்வடிவில் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நான் அவ்வடிவிலேயே அருள் புரிகின்றேன். (2:274:6,8,11)
- என்னைப் புலன்களால் உணர முடியாது. ஆனால், நான் எங்கும் நிறைந்திருகின்றேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் ”ஆத்மா” நானே! அனைத்து உயிர்களுக்கும் தொடக்கம், முடிவு, இடை நானே! உயிர்களின் பிறப்பிற்கும் மரணத்திற்கும் காரணம் நானே! பிரம்மத்திற்கும் அழியா மோட்சத்திற்கும் ஒப்பற்ற பேரின்பத்திற்கும் உறைவிடம் நானே! (9:4, 10:20,39,34, 14:27)
- யாகங்களையும் தவங்களையும் ஏற்பவனாகவும் அகில லோக நாயகர்களுக்கு மேலானவன் ஆகவும் அகில பிராணிகளுக்கு உற்ற நண்பன் ஆகவும் உள்ளேன். யாவும் என்னிடம் இருந்தே விரிகின்றன. இதை அறிந்தவர்கள் அன்புடன் என்னை வழிபடுகின்றார்கள். என் பக்தன் என்னையே வந்தடைகின்றான். (5:29, 10:8, 7:23, 10:10, 16:65)
- யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள எனது அழிவற்ற, ஒப்பற்ற, பரசொரூபத்தை, பக்தி குறைந்தவர்கள் அறிவதில்லை. என்னிடத்து மனதை வைத்து, என்னிடம் பக்தி பூண்டு, என்னை ஆராதித்து, என்னையே வணங்குபவர்கள் என்னை அடைவார்கள். அதிக பாவத்தைச் செய்தவனாக இருந்தாலும் ஞானப்படகால் அப்பாவப் படகைக் கடப்பாய். எனது பக்தன் என்றும் நாசமடைந்ததில்லை. (7:25, 9:34: 4:36, 9,30,31)
- மன அடக்கக் குறைவால் என்னை உணரத் தவறியவன் எப்பாவமும் செய்தவன் அல்லன். ஆகவே, அவனும் புண்ணியம் செய்வதற்குரிய உலகங்களில் வாழ்ந்து பின் நல்லோர் வீட்டில் பிறந்து, முற்பிறவி ஆன்மீக அறிவைப் பெற்று, என் பால் மேலும் ஈர்க்கப்பட்டு பல பிறவிகள் எடுத்தேனும் பக்குவமடைந்து, என்னை வந்தடைகிறான். (5:29, 10:8, 7:23, 10:10, 16:65)
- யார் எனக்கு இலை, மலர், கனி, நீரை பக்தியோடு அர்ப்பணம் செய்கிறார்களோ, அக்காணிக்கையை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். என்றும் என்னையே தியானித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, என்னை அடைவதற்கான யோகசேமங்களையும் புத்தியையும் வழங்கி என்னை அடையச் செய்கிறேன். என்னை உள்ளபடி அறிந்து வழிபடாதவர்கள், துன்பம் நிறைந்த பிறவிச் சுழற்சியின்படி வாழ்ந்து, அதிலிருந்து விடுபட முடியாமல் உழல்கின்றனர். (9:26,22, 10:10,11, 9:24)
- எவர் தங்களின் பிறவிக் கடமைகளை எனக்கு அர்ப்பணித்து (என்னுடைய கடமைகளைத் தங்களின் பிறவிக் கடமைகளாக்கி), என்னையே பரகதியாகக் கொண்டு என்னையே வணங்குகிறார்களோ, அவர்களை மரணக் கடலிலிருந்து விடுபட்டவர்கள் ஆகிறார்கள். மனிதன் தனது இயல்பான கடமையால் என்னை அர்ச்சித்தும், அப்பக்குவ நிலையை அடைகிறான். பக்குவம் பெற்ற மகான்கள் என்னை வந்தடைந்த பின், துன்பத்துக்கு இருப்பிடமாகிய பிறவிக் கடலில் வீழ்வதில்லை. (12:6,7, 18:46, 8:15)
- இருந்த போதிலும், உலக ஆசைகளின் பொருட்டு மதி மயக்கம் கொண்டவர்கள் விரைவில் பலன் பெறும் பொருட்டு பிற தெய்வங்களை வழிபடுகின்றனர். அப்போதும் நான் அவர்களின் நம்பிக்கையின்படி அவர்கள் வேண்டியவற்றைப் பெற வைக்கிறேன். உண்மையில் அவை அனைத்தையும் வகுத்து வழங்குவது நானே! இதை உணராத அற்ப அறிவுடைய அவர்கள் என்னை அடைவதில்லை. மாறாக, அவர்கள் வழிபட்டவர்களையே அடைகின்றனர். மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு துன்பத்தை அனுபவிக்கின்றனர். (4:12:7:20-23:9:24,25)
- இங்ஙனம் உண்மையை அறியாதவர்களும் தத்துவத்தை உணர்ந்த பெரியோரிடம் கேட்டறிந்து அதில் பெரும் நம்பிக்கை வைத்து வழிபட்டு மரணக் கடலைக் கடக்கின்றனர். “நான்”என்னும் கர்வத்தைக் களைந்து ”உன்னுடையது” என்பதைக் கைவிட்டு, “எல்லாமே இறைவனுடையது” என்கிற தூயபக்தியோடு, சர்வ வல்லமை பொருந்திய என்னை சரணடை, எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். என்னிடம் மனதை வை, என் பக்தனாக இரு; என்னை வழிபடு; என்னையே அடைவாய். கீதையை அவமதிக்காது குறை காணாது, ஆர்வத்தோடு கேட்டு வந்தாலே மனிதன் பாவங்களிலிருந்து விடுபட்டு, புண்ணியம் செய்தவர் உலகை அடைகிறான். (13:25,18:66,65,71)
அவனது மார்க்கத்தை நாம் கைக்கொள்ளும்போது அவனுடைய தர்மங்களை நாம் வழிபடும்போது, கண்ணன் தேரோட்டியாக நம்முள் இருந்து நமது மனம் எனும் தேரை ஓட்டுகின்றான். நமக்குச் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை அவன் வழங்குவான். அதை விடுத்து உள்ளே அவனிருக்க வெளியே சிலைகளில் தேடிப் பயனில்லை. இதுவே இறை வழிபாட்டின் தார்ப்பரியம் ஆகும்.


No comments:
Post a Comment