![]() |
| நன்றி: tamil.webdunia.com |
சிறுவயதில் நமக்கு மனதில் எந்தக் கவலையும் இருப்பதில்லை. பின்னாளில் சிறிது சிறிதாகப் பல கவலைகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. பல துன்பங்கள் நமது மனதை சிறிது சிறிதாகப் பாதிக்கின்றது. இதனால், சிறிது சிறிதாக நம்மை அறியாமலே நமக்கு நம்வாழ்க்கையில் பிடிப்பின்றிப் போகிறது. ஏன் வாழ்கின்றோம், என்று தோன்றுகிறது. சில சமயங்களில் ஏன் பிறந்தோம், என்று கூடத் தோன்றும். இவை நமது உடலை நமது மனதின் கவனத்தில் இருந்து சிறிது சிறிதாக விலக்குகிறது. இதனாலேயே நமது உடல் மூப்படைகின்றது.
இயல்பாகவே நமது மனமானது நமது வாழ்க்கை மீது பாரிய ஆதிக்கம் உடையது. நமது மனதின் எண்ணங்கள் நமது எதிர்காலத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனையே விவேகானந்தர், "நீ எது நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகின்றாய்" என்றார்.
இவை எதுவும் ஒரு உடற் பயிற்சியாளனைப் பாதிக்காது. உடற்பயிற்சி செய்யாதவர்தம் உடல் மீட்டாத வீணையைப் போன்றது. அதன் தந்திகள் மற்றும் உடலானது, நாதத்துடன் சங்கமிப்பதில்லை. இதனையே இராவணன், தனது ஒரு தலையுடன் உடலை உருவி சாமகானம் வாசிப்பது போல நமக்குக் கூறியிருக்கலாம். அதாவது, உடற்பயிற்சி செய்யாதபோது நமது உடலானது நமது மனதில் (பெரும் பகுதி மூளையில்) இருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கின்றது. இதனால், நமக்கு பல உடலியல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகிறது. தற்காலத்து வேலைகள் இது போன்ற நிலமையையே நமக்குத் திணிக்கின்றன. நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், நமக்கு அது பலவகையில் நன்மை பயக்கும்.
#சாமகானப்பிரியன்
சிலவேளை, "பணம் வந்தவுடன் அவனின் முகத்தில் செந்தழிப்பு வந்துவிட்டது. இளமையாக தோன்றுகின்றான்" என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அதுவும் நான் கூறும் செயல்விளைவிற்கு அமையவே நிகழ்கிறது. பணம் வந்தவுடன் ஒருவருடைய கவலைகள் அகல்கிறது. மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. நாளடைவில் அது அவர்தம் முகத்திலும் பிரதிபலிக்கிறது. இதில் மாய மந்திரம் எதுவும் கிடையாது. "மகிழ்ச்சி" ஒன்றே அவரை அழகாக்குகின்றது. இந்த விளைவு நாம் நினைப்பது போல சில நாளிகைகளில் நிகழ்வதல்ல. சில மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். எந்த அளவிற்கு அந்த விளைவு மனதைப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அவன் வீச்சு, வேகம் அமைகிறது.
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே! இந்த உடல் நமது மனதின் விம்பமாக மட்டும் அமையாது ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்தது. ஒன்றில் ஏற்படும் பாதிப்பு இன்னொன்றில் பிரதிபலிக்கிறது. ஆனால் எது நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் அது நமது மனம்தான். அதனை சரியாகக் கையாண்டால் நமது வாழ்வை வெற்றி கொள்ள இயலும். பல சோதனைகள் நம்மை வாட்டும். பல துயர்கள் நம்மைத் துரத்தும். ஆனால், நாம் நம்மனதைத் தளராமல் வைத்திருந்தால் அனைத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிவிடலாம். எதுவும் நம்மை அசைத்துவிட முடியாது. எந்த ஒருபோதினிலும் மனம் உடைந்து போகக் கூடாது; பின்வாங்கி விடக் கூடாது; முயற்சியைக் கைவிடக் கூடாது.
மனம் ஒரு மாய மந்திரக் கட்டு. இது ஒரு நூலின் தலைப்பு ஆகும். உடலில் #தானாக வரும் அநேக பாதக விளைவுகள் மனதில் ஏற்படும் கோளாறுகளாலேயே நிகழ்கிறது. நீங்கள் தொடர்ச்சியாகப் பல குழப்பங்களை, தீர்க்க முடியாத புதிர்களைக் சந்தித்தால் நாளடைவில் அதன் விளைவு உங்கள் உடலிலும் பிரதிபலிக்கும். உங்கள் இரத்த அழுத்தங்கள் மாறுபடும். உங்கள் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகும். உடலில் இன்னும் பல பாகங்களில் என்ன என்னவோ #சொல்ல முடியாத நோய்கள் எல்லாம் ஏற்படும். சிலவேளை பல பாகங்களில் காயங்களைக் கூட ஏற்படுத்த வல்லது, இந்த மனம். இதன் உச்சத்தினை இங்கே காணலாம், ஒருவர் தனக்குத் தீ சுட்டது போல அல்லது இரும்பால் அடித்தது போல கனவு கண்டு எழும்போது உடனே அல்லது நாளடைவில் அந்த இடத்தில் தீக் காயம் அல்லது அடிபட்ட தழும்பு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடியும்.
ஒரு குட்டிக் கதையுடன் இந்தப் பதிவை முடிப்போம். என் அன்னை கூறினார், தான் நடராஜர்பத்து படித்த நாளன்று, இரவு கனவில் பயங்கரமாக ஒருவர் வீட்டின் முன் இருந்தது போலவும் அதனை ஒரு பாம்பு தன் கைகள் மற்றும் வால் கொண்டு பிடித்துச் சென்றது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்.
அதற்கு நான், பஜனையும் பக்தியும் நமது மனதிற்குத் தென்பு தருபவை. மனம் உடைந்து விடாமல் தாங்கிப் பிடிப்பவை. மனதின் தெளிவே நமது நிம்மதி மற்றும் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கிறது. நீங்கள் அது போன்ற பக்தியினால் திருப்தி அடைந்தமையால் உங்கள் மனம் நிம்மதி, பலம், தெளிவு அடைந்திருக்கிறது. உங்கள் மனம் தெளிவு அடைந்தமையால் அது தனது எதிர்கால நிகழ்வுகளை வெற்றிகரமாகச் செய்ய இயலும் என்பதை உணர்கிறது. இதனை உணர்த்தவே உங்கள் மனம், நீங்கள் ஏற்கனவே கேட்ட, பார்த்த ஆச்சரியம் நிறைந்த கதைகளின் பகுதிகளை இணைத்து உங்களிற்குக் கனவாகக் காட்டி இருக்கிறது, என்றேன்.
மனதின் ஒட்டுமொத்த நிலவரமே நமக்குக் கனவாக வருகிறது. கனவு நனவாவதாகப் பலர் சொல்லும் கதைகளும் இதன் பாற்பட்டவையே. காலைக் கனவு பலிக்கும் என்பதும் கூட இதனுடன் தொடர்புபட்டதுதான். இங்கு கூறப்பட்ட கருத்துக்களில் பல ஆன்மீக மர்மங்களுடன் தொடர்புபட்டவை. ஆனால், அவை எதிரியின் கைகளில் சிக்காமல் இருக்கும் நோக்குடனும் தீய எண்ணங்கள் கொண்டவர்களை, பயத்தினால் அடக்கி வைத்திருக்கும் நோக்குடனும் அவை கதைகள் கூறி, பல சடங்கு சம்பிரதாயங்களில் மறைத்து வைக்கப்பட்டன. ஆனால், இந்நாளில் அவை பயனின்றிப் போய்க்கொண்டு இருக்கின்றன.
தொடர்ந்து, இதிலிருந்து வேறுபட்டு மனங்களின் சங்கமத்துடன் தொடர்பான ஒரு கதையும் சொன்னார். தான் ஆதிசேடன்(பருந்து) வீட்டின் மேலே பறக்க அதனை வழிபட்ட போது, அன்று இரவு கனவில், ஒரு பருந்து மேலிருந்து இறங்கி முற்றத்து மணல் கும்பியில் இருந்த பாம்பினைப் பிடித்துச் சென்றது. மறுநாள் காலை அதே இடத்தில் ஒரு பருந்து இறங்கி மண்ணைக் கவ்விச் சென்றதாகச் சொன்னார். இது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
"மனம்போல வாழ்க்கை"

No comments:
Post a Comment