கயவர்களின் கலியாட்டத்தில் தர்மம் எல்லாம் தோற்றுப் போகிறது. இதனால் பலர் ஆத்திகர்களாகவும் தெய்வ நம்பிக்கை அற்றவர்களாகவும் மாறுகின்றனர். சிலர் தாமும் தீய மார்க்கத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். நானே கூடப் பல பதிவுகளில் ”இறைவன் என்று ஒரு தனிப்பொருள் இல்லை. அவர் நம்முள்ளே, நமது சிந்தையினிலேதான் இருக்கின்றார்” எனக் கூறி இருந்தேன். இதற்கிடையிலும் ஆன்மீக வழிபாடுகளிலுள்ள உண்மை மற்றும் பலன்கள் குறித்துப் பல பதிவுகள் இட்டிருந்தேன். அவற்றில் இதுவும் ஒன்றாகிறது.
பக்திப் பாட்டுக் கேட்பதால் பலன் உண்டா?
ஆம், பக்தி வளரும். சிலருக்கு தல அஜித்தின் பாட்டுக் கேட்டால் பக்தி வளரும். சிலருக்கு தளபதி, விஜையின் பாட்டுக் கேட்டால் பக்தி வளரும். சிலருக்கு தலைவர், ரஜினிகாந்தின் பாட்டுக் கேட்டால் பக்தி வளரும்.
பக்தி என்றால் என்ன?
உங்கள் மெய் நீங்கள் உணர்வது பக்தி.
உங்கள் உடல் மீதான ஆதிக்கத்தை நீங்கள் பெறுவது பக்தி.
அதற்கு மேலான ஆற்றலை நீங்கள் பெறுவதும் பக்தி.
உயிரையும் உடலையும் இணைப்பது பக்தி.
ஆணவம் ஒழிப்பது பக்தி.ஞான தீபம் ஏற்றுவது பக்தி.
அன்பை பெருக்குவது பக்தி.
மகிழ்ச்சியான நிறைந்த மனம் பக்தி.
ஒளிமயமான வாழ்வளிக்கும் பக்தி.
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து."
வாழ்வில் வெற்றிகொள்ள ஆத்திகனுக்கும் இந்த பக்தி அவசியமானதுதான். ஆனால் அவன் அதை தெய்வீக மார்க்கம் அன்றி வேறு வழியில் அடைகின்றான்.
ஆம், ஆனால் பொருள் விளங்காமல் அவற்றை ஓதிப் பயன் ஏதும் இல்லை. பதிகங்கள் உளவியல் ரீதியாக, நமது மனதைத் திடப்படுத்தும் உந்துகோல்களை ஏற்படுத்துகின்றன. சில பதிகங்கள் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடுகள் பற்றியும் கூறுகின்றன. அதோடு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்போது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கின்றன என்பது விஞ்ஞானமே கண்ட உண்மை ஆகும். அக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்ட நோய் தீர்க்கும் பதிகங்கள் உண்டு. அவற்றிலே சம்பந்தர் பாடிய கோளறு பதிகமும் ஒன்று.
உதாரணமாக,
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
இப்பதிகத்திலே சம்பந்தர் நாவுக்கரசருக்கு நம்பிக்கை அளிக்கிறார். நாளும் கோளும் நமக்குச் சாதகமாகவே உள்ளது. இவை எல்லாம் தாண்டி இந்த அண்ட சராசரம் ஆளும் அந்த இறைவனின் துணையும், என்றும் நன்மை புரியும் நமக்கே என்று கொள்க. இவ்வாறு அனைத்தும் நமக்குச் சார்பாக இருக்க, நான் நம்பிக்கை கொள்கிறேன்; எனையொரு பிணியும் அணுகாது என்கிறார். இவை அத்தனையும் நிலைகுலைந்திருக்கும் மனிதர்தம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் உளவியல் ரீதியான வார்த்தைகள் ஆகும். ஆனால், பொருள் விளங்காமல் எந்தப் பதிகமோ பாமாலையோ படித்துப் பயன் இல்லை. ஆனால், பொருள் விளங்காமல் உச்சரிக்கும் சில மந்திர வார்த்தைகள் அவற்றின் நாத ஓசை காரணமாக எதிரிகளை திணற வைக்கும் ஆற்றல் படைத்தவை. அவை குறித்துப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.
வாழ்வாங்கு வாழ எத்தனை வழிகள் வகுக்கப்பட்டு இருப்பினும் அவற்றை நாம் கடைப்பிடிப்பது கடினம். அதற்கு நமக்கு வேண்டியவற்றை நாம் நமது #வாழ்க்கைமுறையோடு சேர்க்க வேண்டும். அதற்கு நடனம், பாடல், ஓவியம் ஆகிய கலைகள் பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஓவியமே அதிக பழமையானது. தொல்லியல் ஆராய்ச்சிகளில் கிரேக்கர்களின் குகைகளில் பல வகையான ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை நாம் இன்று பார்ப்பதற்காக விளையாட்டாக வரையப்பட்டவை அல்ல. அவர்களின் வாழ்க்கை முறையில் சிலவற்றை அவர்தம் சந்ததியினர் மறந்து / வழக்கற்றுப் போகாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கவே அவற்றை அவர்கள் அவ்வாறு ஓவியங்களாக வரைந்தனர். இங்கே பதிகங்களும் பல மறை பொருட்களைக் காவி வரும் கருவியாக அமைந்திருகின்றன.
எவ்வாறாயினும் அனைத்தும் நமது சிந்தையில் இருந்தே விரிகிறது. நாம் பல தெய்வங்களை வழிபடுகிறோம்; அத் தெய்வங்களையும் படைத்ததும் மனிதனது சிந்தனைகள்தான். உங்களுக்குள்ளேயே அனைத்து சக்திகளும் இருக்கிறது. அதை மிருகமாக வெளிக்கொணர்வதா இல்லை தெய்வீகமாக வெளிக்கொணர்வதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சக்தி என்றால் அமானுஷ்ய சக்திகள் அல்ல. அனைத்தும் மெய்ஞானத்திற்கு உட்பட்ட சித்துகளே.
“மெய்ப்பொருள் காண்பதறிவு”


No comments:
Post a Comment