”அன்பே சிவம்”
கடவுள் இருக்கிறார்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர். இவை யாவும் முற்றிலும் உண்மை; அதோடு அப்பட்டமான பொய்கள். அதன் அர்த்தத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள். கடவுளைத் தேடி ஆலயம் செல்கிறோம். எம்மால் அருவநிலையில் பக்தி செலுத்த முடியாதபோது, மனம் மாறுபட்ட குழப்பங்களில் இருக்கும்போது பக்திநிலையை அடைவதற்கான கருவிகளே அவை. இறைவன் சக்தி சொரூபமானவர் அல்லவா! எங்கும் நிறைந்தவர்.ஆலயம் செல்லலாம். விரதங்கள் பிடிக்கலாம். வேண்டுதல்கள் வைக்கலாம். ஆனால் காரியங்களை நீங்கள்தானே ஆற்றியாக வேண்டும். இறைவனிடம் உங்கள் குறையை முன்வையுங்கள். இறைவனை மனமுருகி வழிபடுங்கள். உங்கள் வெற்றிக்கான பாதையை நோக்கி நீங்கள் செயலாற்றுங்கள். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. அவ்வாறு அல்லாது அவனே வந்து அருள் புரிவான் என்று காத்திருந்து இலவு காத்த கிளியாகிவிட வேண்டாம். அதோடு ஆலயம் செல்வதால், அங்கு சடங்குகளைச் சரியாகப் பின்பற்றுவதால் பல நன்மைகள் உண்டு. அது பற்றி நான் பிற பதிவுகளின் கூறியிருந்தேன். உண்மையில் “ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்” ஆகும்.
நீங்கள் எந்தவொரு சுவாமிகளிற்கு நீண்ட காலம் எப்பெயர்ப்பட்ட பணிவிடை புரிந்து ஞானம் உரைக்குமாறு வேண்டினும் அவர்கள் இதையே உபதேசிப்பர். இறைவன் என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. இறைவன் மீது பக்தி செலுத்த வேண்டும். உங்கள் இலக்கை நோக்கி அவனை நினைந்து கடமையாற்ற வேண்டும். அதிஷ்டம் உங்கள் பக்கம். இதுவன்றி மெய்ப்பொருள் ஏதுமில்லை. ஆனால் எப்போதுமே அழியாதது; நிலையானது ஒன்றுதான். அது சக்தி மட்டும்தான். அவன் துணைநிற்க உன்னை தீயசக்திகள் ஒன்றும் செய்ய முடியாது.
விரதம் பிடிப்பதாலும் பல நன்மைகள் உண்டு. அதனால் உங்களில் தெய்வீகம் பெருகும். ஆனால் தொடர்ச்சியான விரதங்களால் உடல் சோர்ந்து போதல் முறை அல்ல. நீங்கள் ஆரோக்கியம் குன்றினால் யார் உங்கள் கடமைகளைச் செய்வார்கள். பிறகு எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ முடியும். அத்துடன், உடல் அரோக்கியம் இல்லாமல் உயிர் இங்கு நிலைப்பதில்லை. அதைத் திருமூலர் ஒரு பாட்டில் பின்வருமாறு கூறி இருக்கிறார். “உடல் வளர்க்கும் உபாயமறிந்து உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார்.” உங்கள் உடல் உள ஆரோக்கியம் சிறப்பாக இருக்கின்றபோது, உங்கள் பயணம் வெற்றியை நோக்கி இருக்கும்போது, ஏனையவர்கள் குழப்பங்களிலே உழலும்போது, நீங்கள் வெல்வதை யார் தடுத்துவிட முடியும். இங்கே இறையருள் தெரிகிறது. ஆனால், வேரறுத்து ஆராய்து பார்த்தால் அங்கே அருள் புரிந்து கடவுள் அல்ல; நீங்கள் தான். கடவுள் என்று ஒரு தனிப்பொருள் இல்லை.
கடவுள் இல்லையா? பிறகு கோயில்களிலே தீபதூபங்கள் எதற்கு, அபிசேகங்கள் எதற்கு, அர்ச்சனை எதற்கு, கொடி, குடை எதற்கு, யாகங்கள் எதற்கு. இத்தனை வித்தைகளும் ஏமாற்று வேலைதானா? அத்தனைக்கும் அர்த்தம் உண்டு. ஆனால் நீங்கள் அறிந்து கொண்டிருக்கவில்லை. அவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இல்லையேல் அப்படியே பின்பற்றி நன்மை அடையுங்கள். அன்றேல் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் போக்கில் கடமையைச் செய்யுங்கள். ஆனால் நிச்சயமாக இவை யாவற்றையும் கடைப்பிடிப்பவனிடம் நீங்கள் தோற்றுப்போவது பற்றி வருத்தம் கொள்ளக் கூடாது. அதாவது நீங்கள் உங்கள் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொருள்.
கடவுள் இருகிறார் என்பதையும் இல்லை என்பதையும் என்னால் கேள்விகளால் நிரூபிக்க முடியும். தான் படைத்த உணவை உண்ணவில்லை என்று தன் தலையைக் கல்லில் அடித்தார் நம்பி. அப்போது பிள்ளையார் வந்து அருள் புரிந்தாக ஒரு கதை இருக்கிறது. ஆனால் இன்றும் கோயில்களில் கடவுளுக்கு உணவுகளையும் பூக்களையும் நிவேதனம் செய்வது வழக்கம். ஆனால், இன்றும் இறைவன் உண்பது இல்லை. ஆனால் அதற்காக யாரும் தன் தலையைக் கல்லில் அடிப்பதில்லையே! ஏன்? கடவுள் என்று ஒரு தனிப்பொருள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அனைவர் மனதிற்கும் ஒரு கள்ளம் இருக்கும். அது அவர்களைப் பொய்களை நம்ப வைக்கிறது. இறைவன் இல்லை என்று தெரிந்தும் ஏனையோர் நம்புவதால் அதனை உண்டு என்று எமது மனம் நம்புகிறது. இப்போது அவர்களுக்குள் இருக்கும் கள்ளம், அவர்களுக்கே வினையாகிறது. அது உண்மையை அவர்களிடம் இருந்து மறைக்கிறது. அவர்கள் இனி உண்மையத் தேடப் போவதும் இல்லை.
அன்றைய காலங்களில் வரையப்பட்ட கதைகளிலும் பாடல்களிலும் பல உண்மையான பொருட்கள் மறைந்திருக்கின்றன. ஆனால், அந்தக் கள்ளம் என்னும் இருளால் சூழ்ந்து ஞான ஒளியை அறியாதவர்களால் அவற்றை அறிய முடிவதில்லை. இறைவன் மந்திரக்கட்டுக்கு உட்படுவதாகவும் அருளற்றுக் கிடப்பதாகவும் சிலர் கருதுவர். அவற்றில் துளியும் உண்மை இல்லை. இறைவன் அளவற்ற ஆற்றல் நிறைந்தவர். அவரை யாராலும் எவராலும் அசைத்துவிட முடியாது. நீங்கள் உண்மையான முழுமையான நேர்மையான பக்தி செலுத்தும்போது அதிஷ்டம் உங்கள் பக்கமே! ஆனால் காரியம் நீங்களே ஆற்ற்றியாக வேண்டும். மூட நம்பிக்கைகள் என்னும் மாயையில் மூழ்காது அறிவுக் கண்களைத் திறந்து கொள்ளுங்கள். நான் கூறுபவற்றை நீங்கள் வெறுமனே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்களே ஆராய்ந்து பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். முழுமனதுடன் நீங்கள் ஆற்றும் காரியங்கள் நிச்சயம் வெற்றியடையும்.
குர்ரான், தேவாரங்கள், பிரித், பைபிள் ஓதுவதால் என்ன பயன்?
எதனையும் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். பொருளை அறியாதவர்கள் பொருளை நன்கு தெரிந்தவரிடம் ஒருமுறை கேட்டறிந்து அதை ஓதும் போது அப்பொருள் கொள்ள வேண்டும். அதன் விளக்கத்தை, கருவை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பயன் ஏதும் கிட்டாது. பொருளறிந்து ஓதின் அது உங்கள் மனதில் வேரூன்றி உங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். உங்களை அறியாமலே நீங்கள் வெற்றியை நோக்கி நகர்வீர்கள். இது போல நோய், பிணி தீர்க்கும் பதிகங்கள், பாடல்களும் உண்டு. அதன் தொழிற்பாடும் இதன் பாற்பட்டதே!
குறிப்பு: இறைவனிலே அல்லா, இயேசு, சிவன், புத்தர் என எந்தப் பாகுபாடும் கிடையாது. அதே போல ஆலயம், தேவாலயம், விகாரை, மசூதி என்பவை வேறுபட்டவை அல்ல. ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் ஒன்றுதான். கடவுள் என்றால் கடவுள். அவ்வளவுதான்.

No comments:
Post a Comment