உலகிலே பல மதங்கள், சமயங்கள் உள்ளன. அவை பல்வேறு கடவுள்களைப் போற்றுகின்றன. எதிலும் ஒன்றில் ஒன்று சிறப்புக் குறைந்ததாயில்லை. அல்லா என்றாலும் இயேசு என்றாலும் சிவன் என்றாலும் புத்தர் என்றாலும் ஒரே பரவசமே உண்டாகிறது. இலங்கையில் நாலு மதங்கள்தான். ஆனால் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் உண்டு. பெயரிடப்படாமல் மேலும் பல உண்டு. அனைத்து மதங்களும் தர்மத்தையே போதிக்கின்றன. எம்மை ஆட்டி வைக்கும் சக்தி ஒன்று உண்டு என்றே சொல்கின்றன. ஆனால் மனித சக்தியை விஞ்சி அவை நேரடியாக உதவிட முடிவதில்லை. நான் ஒருநாள் அப்பாவிடம் "கடவுள் என்பது பொய்யா? எல்லாம் செப்படி வித்தையா?" எனக் கேட்டபோது, அப்பா பின்வருமாறு சொன்னார்.
சுற்றி வந்து முணு, முணுக்கும் மந்திரங்கள் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!"
-சித்தர் சிவவாக்கியம்.
கல்லொன்றை வைத்து, அதற்குப் பூக்கள் வைத்து, அதைச் சுற்றி வந்து, மந்திரங்கள் முணு முணுத்து என்ன பயன். அந்த நட்ட கல்லும் பேசுமா? நாதன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதைக் காட்டுமா? சட்டியில் வைத்து சுட்டு சமைத்த கறியின் சுவையை அந்தச் சட்டி, சட்டுவம் தருமா? இவை எல்லாம் முதற்படிகள். உண்மை நிலையை நமக்கு அறிவிக்க நாம் கைக் கொள்ளும் கீழ் நிலை செய்கைகள். நாதனாகிய ஈசன் நம்முள் இருக்கிறார். இதனை நாம் ஈற்றில் பக்தி மேலோங்கும் போது உணர்ந்து கொள்வோம். மெய்ப்பொருள் ஒன்று தான். ஞான ஒளி ஒன்று தான் மெய்ப்பொருள். ஏனைய அனைத்தும் நம்மை அதை நோக்கி இட்டுச் செல்ல செய்யப்பட்ட ஏற்பாடுகளே!
என்றார்.
நாம் நினைப்பதையே நமது உடல் செய்கிறது. ஆனால் தனது அறிவிற்கு எட்டினாற் போல அவை மாறுபடும். ஒவ்வொரு தசையும் நமது எண்ணங்களுக்கே கட்டுப்பட்டவை. இது எந்த அளவிற்கு ஆழமானது என்றால் அதனை உங்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. நமது எண்ணங்களே நமது வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதைக் தீர்மானிக்கின்றன. இதனையே "எண்ணம்போல வாழ்க்கை" என்பர். விவேகானந்தர் கூட "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்" என்றார். ஆக, நமது சிந்தை எதை நோக்கி இருக்கிறதோ அதில் புலமைத்துவம் அடையும். அதில் வெற்றியும் காணும். அதோடு, எந்த அளவிற்கு அதிலேயே வேரூன்றி இருக்கிறது என்பதிலேயே வெற்றியின் அளவு தங்கியுள்ளது. இப்படிப் பல மதங்கள் பல சிறப்புகளோடு இருக்க, எது சிறந்த மதம்? எதை நான் பின்பற்றுவது? என்ற குழப்பங்களே தேவை இல்லை. எல்லா மதங்களினதும் நோக்கங்கள், கருணை, பக்தி, அன்பு, மகிழ்சி, தர்மம் போன்றனவே.
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் ரஜினிகாந்தின் தீவிர விசிறி. அவருடைய படங்கள், பாடல்களைக் கேட்கும்போது தனக்கு உள்ளே பட்டாம்பூச்சிகள் பறப்பதாகச் சொன்னான். தனக்குள் ஒரு உத்வேகம், சக்தி உருவாகிறது என்றான். நான் சொன்னேன், இந்த அன்பு என்ற உறவு தான் ஒருவனுக்கு நம்பிக்கை அளித்து அவனை உயர்த்துகிறது. இதே உறவுதான் கவுளுக்கும் பக்தனுக்குமான உறவு. இன்னொரு இடத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவு. பிறிதொரு இடத்தில் காதலனுக்கும் காதலிக்குமான உறவு. அனைத்து சமயங்களும் இதனையே எதிர்பார்க்கின்றன. கருணை செய்தல், மனமுருகுதல் போன்றவற்றையே மதங்கள் வேண்டி நிற்கின்றன. இவை இதற்காக இசை, நடனம் போன்ற கலைகளைப் பயன்படுத்துகின்றன. அவை நம்மில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துகிறது. நமது மனதில் ஒரு தீயை ஏற்றுகின்றன. நமது இலசியத்தை நோக்கி நம்மை இலகுவாக இட்டுச் செல்கின்றன. நீ ஒரு மதத்தையும் பின்பற்றாவிடினும் இது போன்ற நற்குணங்கள் உன்னை உயர்த்தும் சக்தி படைத்தவை. ஏன் நீ ரஜினி என்னும்போது கூட அதே பரவசம் ஏற்படக்கூடும். ஆனால் உன் உழைப்பு வேண்டும். பிள்ளையார் வந்து காரைக்காலம்மையை கையிலைக்குத் தூக்கி விட்டது போல உன்னை யாரும் தூக்கி விடப்போவது இல்லை. ஆனால் பக்தி செய்வதில் நீ அத்தனை தேர்ச்சியுற்றால் அதுவும் சாத்தியமே!

👌👌
ReplyDelete