இந்தப் பதிவில் பிள்ளையார் பற்றிய பல உண்மைகளை இன்று உடைத்தெறியப் போகிறேன். அதோடு எந்த வழிபாட்டு முறையையும் குற்றம் சொல்வதற்காக இப்பதிவு செய்யவில்லை. நம்பி நம்பி நொந்து நொந்து ஒன்றுமில்லை என்று சோர்ந்து போன பக்தர்களுக்காக, உண்மைகளை உடைத்தெறியும் முதற்படி.
நான்முகனை பிரணவப் பொருள் தெரியவில்லை என்று நான்கு தலைகளிலும் குட்டி சிறையில் வைத்தான் ஆறுமுகன். பிறகு அதன் பொருளை தன் தந்தை சிவனுக்கே உபதேசம் செய்த கீர்த்தியும் படைத்தவன். ஆனால், அந்தப் பிரணவப் பொருளின் வடிவமாகவே அமர்ந்தவர் பிள்ளையார் என்றுரைத்து முதற் கடவுள் என்றும் போற்றுகிறது சைவசமயம். அனைத்திற்கும் முதற் தேவை மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் அல்லவா! பிள்ளையாரின் தோற்றம் அதனைப் பெறும் வழியைக் காட்டப் போகிறது. கடவுளின் இருப்பு என்பது எல்லாம் ஒரு பக்கம் போக இது ஞானம் பற்றிய தேடல் ஆக அமையப் போகிறது.
பிள்ளையாரின் பிறப்பு என்று சைவசமயம் ஒரு கதை கூறுகிறது. அதனை முதலில் பார்த்துக் கொள்வோம். உமாதேவியார் நீண்டகாலம் குளிக்காமல் இருந்ததால் வந்த தனது ஊத்தையை உருட்டி ஒரு சிறுவனை உருவாக்கி, காவலுக்கு வைத்து விட்டு குளிப்பதற்காக செல்கிறார். சிவன் வந்து அனுமதி கேட்க, அச்சிறுவன் மறுத்தமையால் கோபத்தில் அவன் சிரசைக் கொய்கிறார். உமாதேவியார் வந்து அவனை உயிர்ப்பிக்க வேண்டியதால் யானையின் தலை ஒன்றை எடுத்துப் பொருத்தி உருப்படி செய்கிறார் சிவன். இது சைவசமயிகள் அநேகருக்குத் தெரிந்த கதை தான்.
மெய்ப்பொருள் ஒன்றும் அதனுள் மறைந்து இருக்கிறது. உமாதேவியார் ஊத்தையை உருட்டி உருவாக்கிய தொப்பைச் சிறுவன் பிள்ளையார். சக்தி சரீரத்தை இயக்கும் சக்தி மற்றும் சிவம் சீவன் அல்லது மூச்சு ஆகும். துதிக்கை நீண்ட குழல் போன்ற மூக்கு. குளியல் எனப்படுவது இரத்தத்தால் அக உடலைக் குளிப்பாட்டுதல் ஆகும்.
பிள்ளையாரின் தோற்றத்தை ஒருவர் தரிசிக்கும்போது, அவர் முதலில் அவதானிப்பது, துதிக்கையும் பின் சற்றுக் கீழே வந்தால் அவர் தொப்பையும் ஆகும். அதன்படி, முதலில் நீண்ட குழல் கொண்ட மூக்கும் பிறகு பெரிய கனவளவுடைய தொப்பையும் தோன்றும். அந்த துதிக்கையில் ஒரு சுழிப்பும் அதில் ஒரு மோதகமும் இருக்கும். இது பிரணவப் பொருளையே குறித்து நிற்கிறது.
பிரணவத்தை சரீரத்தில் பிரயோகிக்கும் முறை
பிரணவம் என்பது எல்லையற்றது. அதனை உடலில் பிரயோகிக்கும் முறை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
நீண்ட துதிக்கை: முதலில் மூச்சை மெது மெதுவாக வெளியே விட்டு உடலை ஒடுக்கி மிகக் குறும் கனவளவாக்க வேண்டும். அப்போது சுகத்தினை மட்டுமே உணர வேண்டும். உடலில் நோவு தோன்றும் அளவுக்கு நெருக்கக் கூடாது.
துதிக்கையில் மோதகத்தைப் பேணும் சுழிப்பு: சற்று நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்போது உள்ளே மறை அமுக்கமாக இருக்கும்.
தொப்பை: இப்போது உடலை நெருக்கிய தசைகளைச் சட்டென்று விடுவிக்க, தானே மூச்சு வேகமாக உள்ளே நிறைக்கும். அப்போது உடல் முழுவதும் உள்ள இரத்தம் தொப்பையில் நிறையும்.
அதோடு மூச்சினை மார்புகள், பிட்டைகள் இரண்டிலும் சேர்த்து நிறைப்பது உத்தமம். இது குறித்து வேறு சில பதிவுகளில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவற்றை இங்கே காணலாம்.
பிள்ளையார் என்ற நாமத்தில் ”யார்” என்பது மூச்சை விடும்போதான அவத்தை ஆகும். ”பிள்ளை” என்பது மூச்சை இழுக்கும்போதான அவத்தை ஆகும். இது நாம ஜெபத்திற்கு உகந்தது.
தோப்புக் காரணத்தால் விளைவது என்ன?
ஒரு குழந்தைக்கும் அன்றாடம் உடற்பயிற்சி செய்கின்ற ஒரு ஆரோக்கிய தேகிக்கும், மனம் சஞ்சலம் இல்லாத போதான சுவாச வீச்சு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் நாளடைவில் பல காரணங்களால் மாறக் கூடும். தண்டிப்பதும் வெகுமதி அளிப்பதும் மனித வள முகாமைத்துவத்தின் ஒரு பகுதிதான். அந்த ஞானத்தினை மிகச்சிறந்த ஒரு உடல் அப்பியாசத்துடன் சேர்த்து தோப்புக் கரணத்தை வடிவமைத்து இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். சுவாச ஒழுங்கு மாறும்போதும் மனம் அலை பாய்ந்து திரியும் போதும் அதை இரண்டு தட்டுத் தட்டி கட்டிப் போட அவர்கள் இதனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், முதல் பாகம் தெரியாதவர்கள் குட்டி குட்டி சொட்டை விழுந்தது தான் மிச்சம் என்று நினைத்திருப்பார்கள்.
இதற்கான விளக்கத்தை ”மூலாதார சக்தி மூளையில் பாய்ந்து விட தோப்புக் கரணப் பயிற்சி உத்தமமாய் அமையும்” என்றும் பக்தி பாடல் ஒன்று கூறுகிறது.
பிள்ளையார் சுழியின் பொருள் என்ன?
செயல் எதையும் தொடங்குமுன் பிள்ளையார் சுழியைப் போற்றுமாறு ஒரு பாடல் விதைந்துரைக்கிறது. பிள்ளையார் சுழி என்று நாம் போடும் "உ" என்பதன் பொருள் இதுவேயாகும். துதிக்கையின் முடிவில் மோதகத்தைப் பேண ஒரு சுழிப்பு இருக்கும். அதனை முதல் நினைந்து எந்தக் காரியத்தையும் துவங்க வேண்டும். நினைத்தால் மட்டும் போதாது. பிரணவத்தைச் செய்ய வேண்டும்.
இதயம் ஒரு கண்ணாடி உனது விம்பம் விழுந்ததடி...
வழமையான உருவ வழிபாட்டில் தரிசனம் செய்வதே வழிபாடு ஆகும். ஆனால், கணபதி வழிபாடு விதிவிலக்கானது. நம் நெஞ்சத்துள் (மூலதாரத்தில்) வைத்து வழிபட வேண்டும். அது போல இறைவனது சின்னங்களை, உ+ம்: திரிசூலம், வேல் ஆகியவற்றை வேண்டியவாறு சிரசில் வைத்து வழிபட வேண்டும்.
சீர்காழி எஸ் கோவிந்தராஜன் பாடிய ஒரு பாடலில்... பிள்ளையாரை வழிபட்டால் "வாராத சித்தி வரும், புத்தி வரும், புத்திர சம்பத்து வரும்..." என்று வருகிறது. இப்போது கூறுங்கள், தன் மகனுக்காகத் தாய் வழிபட்டால் மகனுக்கு எப்படி சித்தி புத்தி புத்திர சம்பத்து எல்லாம் வரும்.
இதெல்லாம் சொல்லுறியே, நீ யார்டா?
முருகனும் நான் தான். பிள்ளையாரும் நான் தான். தமிழ்ப் புலவர் ஔவையாரே பிள்ளையாரைப் இப்படிப் பாடுகின்றார், "அப்பம் முப்பம் அமுது செய்தருளிய #தொப்பை அப்பனைத் தொழவினை அறுமே!". தமிழனுக்கு இதை அப்படியே திருப்பிப் பாடத்தான் தெரியும். ஆனால், எனக்கு உண்மையைத் தெரியும். நோக்கத்தையும் அதன் உட்பொருளையும் விட்டு விட்டு பழம்பெரும் சிறப்புக்களை எண்ணிக் கொண்டாடுவதே தமிழனுக்கு வழக்கம் ஆகி விட்டது. அதற்கு ஒரு கண்டிப்பாக இதைக் கொள்வோம்.
காலத்தின் தேவை காரணமாகவோ என்னவோ பிரணவப் பொருளை அனைவருக்கும் கூற யோகிகள் விரும்பியிருக்கவில்லை. பிரணவத்தின் பலன் பெற அதன் பொருளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பூ அச்சில போடுவது பூவாகத்தான் வரும். ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஏற்கனவே அதே #போல வேறு ஒரு பிரச்சினையைத் தீர்த்து இருப்பதே போதுமானது. அது போல பிள்ளையாரின் தோற்றத்தை அனைத்துக் கணமும் மனதில் நிறுத்தினால் நமக்கே தெரியாமல் அந்த நன்மைகள் நமக்குக் கிட்டும் வாய்ப்பும் உள்ளது.
எனது அம்மாவும் தினமும் ஒரு கடவுளுக்கு விரதம் இருந்து கடவுள் வரம் தருவார் என்று உடலை வருத்துகிறார். அவருக்கும் இந்த விளக்கம் எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர் சொன்னார், ”அதெல்லாம் சரிடா, ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் பிள்ளையாரும் இருக்கிறார்” என்றார். இதற்கு மேல் ஒரு மகனாக என்னால் என்ன செய்ய இயலும். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தீவிர பக்தர்களுக்கு இதனைக் கூறி அவர்கள் பயன்பெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி!
"மெய்ப்பொருளின் தேடல் தொடரும்"
No comments:
Post a Comment